மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு புதிய மையங்கள் அமைப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!!!

நடப்புக் கல்வியாண்டு 2022-2023 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்குரிய புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளைப் பின்பற்றி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து நடப்பு கல்வியாண்டு 2022-2023 மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலினை செய்து, அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவற்றை பூர்த்தி செய்து கருத்துருவினை அனுப்புதல் வேண்டும்.

புதிய தேர்வு மையங்கள் கோரி கருத்துரு அனுப்பப்படும்பொழுது, திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துரு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும், 2022 மேல்நிலைத் தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வுமையமாக செயல்பட வேண்டும் எனில் (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை /நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்) மீண்டும் கருத்துரு அனுப்பி, இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. எக்காரணங் கொண்டும் கருத்துருவினை பழைய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்புதல் கூடாது.சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைத்து அனுப்புதல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள்
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )
புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் இத்துடன் அனுப்பப்படும் பிற்சேர்க்கை ‘அ’ மற்றும் ‘ஆ’ வில் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளைத் தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்குப் பரிந்தரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது. 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதிய மையங்கள்:
பரிந்துரை செய்யப்படும் புதிய தேர்வு மையங்கள் ஏதும் இல்லை எனில் ‘இன்மை அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
தற்பொழுது தேர்வு மையங்களாக செயல்படும் மையங்களில், இரத்து செய்யப்பட வேண்டிய தேர்வு மையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உரிய காரணங்களுடன் பட்டியலிட்டு படிவம் 1-ல் பூர்த்தி செய்தும், அங்கீகாரம் / தொடர் அங்கீகாரம் இல்லாமல் நீதிமன்ற ஆணையின் மூலம் தொடர்ந்து மேல்நிலைத் தேர்வெழுதி வரும் பள்ளிகளின் பட்டியலை படிவம் II-ல் பூர்த்தி செய்தும் அனுப்புதல் வேண்டும். நடப்பு கல்வியாண்டு 2022-2023 பொதுத்தேர்விற்கு ஏற்கெனவே தேர்வுமையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள் /புதிய தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கிகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வுமையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களையும், (பிற்சேர்க்கை ‘அ’ ‘ஆ’) மேற்குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் (Format I&II) தங்கள் அலுவலகத்தில் தேர்வுபணியில் ஈடுபட்டுள்ள இருக்கை எழுத்தர் (Examination Clerk) மூலம் 27.10.2022 அன்று காலை 10.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.2022-2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான முகப்புத்தாட்கள் அச்சிடவேண்டிய சூழலில் காலம் தாழ்த்தாது குறிப்பிட்டுள்ள தேதியிலேயே கண்டிப்பாக புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அறிவுரைகள்:
மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் 27.10.2022 அன்று சமர்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.